30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 31
விஎஸ் .நரசிம்மன்
1984 ஆம் ஆண்டு K பாலச்சந்தரால் அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் VS நரசிம்மன் .புகழ் பெற்ற வயலின் கலைஞர் வி.சீனிவாச அய்யங்காரின் மகனான நரசிம்மன் 5 வயது முதலே தந்தையிடம் வயலின் பயில தொடங்கினார்.
இளையராஜா , RD பர்மன் போன்ற இசை அமைப்பாளர்களிடம் பணி புரிந்தார். இளையராஜாவின் பரிந்துரையின் பேரில் KB இவரை தன் படத்தில் இசை அமைக்க வைத்தார். KB இயக்கிய நாடகமான ரயில் சிநேகம் ( இந்த வீணைக்குத் தெரியாது ) தொலைக்காட்சி தொடருக்கு இசை அமைத்தார் .
“மெட்ராஸ் சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா" என்ற இசைக் குழுவை நடத்தி வந்தார்.ராகா பேண்டசி , ராகா சகா என்ற இவரது வயலின் ஆல்பங்கள் புகழ் பெற்றவை.
8 படங்கள் மட்டுமே இசை அமைத்த இவர் அதன் பிறகு என்ன ஆனார்..? சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வான நரசிம்மன் , இந்தியாவின் சார்பில் ஐநா சபையில் பல்வேறு பதவிகளை வகித்தவர் , கடைசியாக ஐநாவின் துணைப் பொது செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
ராஜபார்வை படத்தில் நரசிம்மனின் வயலின் புகழ்பெற்றது. இன்றுவரை அச்சமில்லை அச்சமில்லை படப் பாடல்களை இளையராஜா ஹிட்சில் வைத்திருப்பவர்கள் நிறைய.
படங்கள் : புதியவன் , அச்சமில்லை அச்சமில்லை ,யார் , இளங்காற்று , ஆயிரம் பூக்கள் மலரட்டும் , கண் சிமிட்டும் நேரம் , மூக்குத்தி பூ மேலே,கடைக்கண் பார்வை ...
______________________________
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே
______________________________________
படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து